×

6,151 பணியிடத்துக்கு 52,000 பேர் போட்டியிட்ட குரூப் 2 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட்: ஒரு நாளுக்கு முன்பே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு பதவி) 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 2 நன்னடத்தை அலுவலர், 19 உதவி ஆய்வாளர், 17 சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 8 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஒரு சிறப்பு உதவியாளர், 58 தனிப்பிரிவு உதவியாளர்கள் என மொத்தம் 116 இடத்துக்கும். குரூப்-2ஏ பதவியில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) 9 நகராட்சி பணியாளர் ஆணையர் (கிரேடு2) பணியிடம், 291 முதுநிலை ஆய்வாளர், 972 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 23.2.2022ல் வெளியிட்டது. இத்தேர்வுக்கு 11.78 லட்சத்து 78 ஆயிரத்து 175 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு 2022 மே 21ம் தேதி நடந்தது. இத்தேர்வை 9 லட்சத்து 95 ஆயிரத்து 808 பேர் எழுதினர்.

இந்நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் 2022 நவம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 58,081 பேர் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) எழுத அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி நடந்தது. இத்தேர்வை 51,987 பேர் எழுதினர். பல மாதங்கள் ஆன நிலையில் டிஎன்பிஎஸ்சி உத்தேசமாக அறிவித்த தேதியில் ரிசல்ட் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தேர்வு முடிவை விரைந்து வெளியிட பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்தது. இதை தொடர்ந்து ஜனவரி 12ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 6,151 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் இன்று தான் வெளியாக இருந்தது. ஆனால், டிஎன்பிஎஸ்சி ஒரு நாள் முன்னதாக நேற்றே வெளியிட்டது. குரூப் 2 மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்படும். குரூப் 2 பதவியில் 161 இடங்களுக்கு 483 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மதிப்பெண், மற்றும் நிபந்தனை அடிப்படையில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

குரூப் 2ஏ பதவியில் (நேர்முக தேர்வு அல்லாத பதவி) 5,990 பணியிடங்களுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முடிவுகள் இருவழி தொடர்பு முறையில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 (நேர்முகத் தேர்வு) பணிகள் முடிந்த பின்னர், குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண், தரவரிசை உள்ளிட்ட விவரம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நேர்முகச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு முன்னர் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று பட்டியலில் இடம் பெற்றுள்ள 483 பேரில், தேர்வாணையத்தின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகுதிகளை பெற்றிருந்தால், நேர்முக தேர்வு அல்லாத குரூப்-2ஏ பதவிகளுக்கும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். நேர்முக தேர்வில் பங்குபெற்று அதற்கான கலந்தாய்வில் பதவிகளை தேர்ந்தெடுக்கும் தேர்வர்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறுகையில், டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.inல் ரிசல்ட் வந்துள்ளது. குரூப் 2 பணியில் 483 பேர் மூலச்சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 207க்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ளனர் என்றார்.

The post 6,151 பணியிடத்துக்கு 52,000 பேர் போட்டியிட்ட குரூப் 2 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட்: ஒரு நாளுக்கு முன்பே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு